2 வது திருமணத்திற்கு தயாரான அமலா பால் : காதலர் பற்றி மனம் திறந்தார்!!

1154

அமலா பால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த உடனேயே இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டவர் நடிகை அமலா பால். திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்க விரும்பினாலும், அவரது கணவரின் குடும்பத்தார் விரும்பாததால், குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டது.

பிறகு விஜயும், அமலா பாலும் விவாகரத்து பெற்றார்கள். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் அவர் அவர் வேலையில் பிஸியாக இருந்த நிலையில், இயக்குநர் விஜய் ஐஸ்வர்யா என்ற டாக்டரை சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.

விஜயின் திருமண அறிவிப்பு வெளியான நாள் முதல், அதிரடியான பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வந்த அமலா பால், விஜய் திருமணத்தின் போது கூட, நிர்வாணமாக நடித்த தனது ‘ஆடை’ படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டாரே தவிர, தனது முன்னாள் கணவரின் திருமணம் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில், திடீரென்று தனது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அமலா பால், அப்படியே தனது காதலர் குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அமலா பால், “ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம்.

தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார்.

எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான்.

அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான்.” என்று தனது இரண்டாவது காதல் குறித்து அமலா பால் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். அதே சமயம், அந்த காதலர் யார்? அவருடன் திருமணம் எப்போது? ஆகியவை குறித்து எந்த தகவலும் அவர் கூறவில்லை.