விருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்?

316

வித்யாபாலன்…

முன்னணி பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தற்போது ஷேர்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு வித்யாபாலன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, தான் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்து கொள்ளுமாறு தனது உதவியாளர் மூலம் வித்யா பாலனை அணுகி உள்ளார். ஆனால் விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வித்யாபாலன் கூறிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் படப்பிடிப்பு குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றபோது படப்பிடிப்பு வாகனங்களை தடுத்து நிறுத்திய வனத்துறை ஒரு சில வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.

இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படப்பிடிப்பு குழுவினர் திரும்பி விட்டனர். அமைச்சர் அழைத்த விருந்துக்கு வித்யா பாலன் செல்லாததால் தான் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது என்று அங்குள்ள மீடியாக்களில் செய்தி வெளியானது.

ஆனால் அதனை அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். நான்தான் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கினேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள்தான் என்னை விருந்துக்கு அழைத்தார்கள். படப்பிடிப்பை நிறுத்த நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. என்று கூறியிருக்கிறார்.