கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை!

392

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அண்மையில், இவரது நடிப்பில் மாறா படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில், காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13 என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் என்ற படத்திலும், ஆராட்டு என்ற மலையாள படத்திலும், ருத்ரப்ரயாக் மற்றும் கோத்ரா என்ற கன்னட படங்களிலும், நருடி ப்ரதுகு நடானா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார்.

ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதையை இந்திய சினிமாவில் யாரும் கொடுத்திருக்க முடியாது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தரிக்கப்பட்ட கலியுகத்தில் முன்னணி நடிகையாக நடிப்பதற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் எப்போதும் தயாராக இருந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தை கலியுகத்துடன் தொடர்புபடுத்தி மக்களை எளிதாக புரிந்துகொள்ள வைக்க முடியும் என்பதற்காகவே கலியுகம் படம் தற்போது உருவாகிறது.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமுக்கு உதவியாளராக பணியாற்றிய ராம்சரண் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரைம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே எஸ் ராமகிருஷ்ணா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.