நான் மட்டும் விஜய்யின் 50வது படம் பண்ணிருந்தா மரண மாஸா இருந்திருக்கும்.. 11 வருடம் கழித்து புலம்பும் இயக்குனர்!!

319

புலம்பும் இயக்குனர்…

விஜய்யின் 50வது படத்தை நான் தான் இயக்கி இருக்க வேண்டும் என ஒரு இயக்குனர் புலம்பிக் கொண்டிருக்கும் போது, விஜய்யே 50வது படத்தை ஏன் தான் பண்ணினோமோ என யோசித்திருப்பார். அந்த அளவுக்கு அந்த படம் அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.

எல்லா நடிகர்களுக்குமே 25வது படம், 50வது படம் என்பதெல்லாம் ஒரு மைல் கல் போல. அந்த படங்களை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என ஏற்கனவே வெற்றி கொடுத்த இயக்குனர்கள், பிரமாண்ட இயக்குனர்கள் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் விஜய் அப்படியே நேர்எதிர். புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார். இத்தனைக்கும் விஜய் 50வது படம் இயக்க பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் எப்படி ராஜ்குமார் என்பவரை தேர்ந்தெடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

விஜய் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது 50வது படம் என்கிற மைல்கல் வந்தது. கண்டிப்பாக தனது 50-வது படத்தில் விஜய் சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி செய்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென புதுமுக இயக்குனருடன் சேர்ந்து சுறா எனும் படத்தை கொடுத்தார்.

விஜய்யின் சினிமா கேரியரில் அப்படி ஒரு தோல்வி படத்தை அவர் அதற்கு முன்னர் பார்த்திருக்கவே மாட்டார். ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் முதல் முதலில் விஜய்யின் 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு என்பவருக்கு தான் கிடைத்ததாம். விஜய்க்காக பிரம்மாண்டமான ஆக்ஷன் கதையை எழுதிக் வைத்திருந்தாராம்.

ஆனால் கடைசி நேரத்தில் விஜய்யின் அப்பா உள்ளே புகுந்து இயக்குனரை மாற்றி, தயாரிப்பாளரை மாற்றி வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டாராம். ஒருவேளை 50வது படத்தை நான் இயக்கியிருந்தால் கண்டிப்பாக இன்று பேசப்படும் இயக்குனராக வலம் வந்திருப்பேன் என உருக்கமுடன் கூறியுள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக அசிஸ்டன்ட் டைரக்டராக வலம் வரும் முத்துவடுகு தற்போது வரை ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது சோகமான விஷயம்.