தனுஷின் நடிப்பில் வெளியான கர்ணன் திரைவிமர்சனம்..!

1020

கர்ணன் திரைவிமர்சனம்…

தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் எனும் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சில எதிர்ப்புகள், பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியுள்ள கர்ணன், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நீதியை வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.

கதைக்களம்

கர்ணன் { தனுஷ் } கைது செய்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் துறையினர்கள் அழைத்து செல்கின்றனர். அங்கே துவங்கும் ‘கண்டா வரச்சொல்லுங்க பாடல் ‘ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இடத்தில் முடித்து சில வருடங்கள் படம் பின்னோக்கி செல்கிறது. அங்கே, பொடியன்குளம் எனும் குக்கிராமத்தில் தனது மக்களுடன் வாழ்ந்து வருகிறான் கர்ணன். கர்ணனின் துணை நிற்பவராக லால் மற்றும் அவரது 6 நண்பர்கள்.

பொடியன்குளம் ஊரில் தொடர்ந்து 8 வருடமாக யாராலும் நிகழ்த்தமுடியாத விஷயத்தை கர்ணன் முடிக்கிறான். அதனால், ஊர் வழக்கப்படி கர்ணனுக்கு வாழ் கொடுத்த கொண்டாடுகின்றனர்.

என்னதான் ஊர் மக்கள் சொந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களது ஊருக்கு அரசால் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவிடாமல் மேல் சாதி காரர்கள் தடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தமும் இருக்கிறது.

அதில் ஒன்றாக கர்ணனின் பொடியன்குளம் ஊர் வழியாக செல்லும் ஒரு பேருந்து கூட பொடியம்குளம் அருகே நிற்பதில்லை. அது ஏன் என்று கேட்டால், உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி நிரகிரிகின்றனர் பேருந்து ஓட்டுனர்கள்.

இதற்காக பல வழியில் போராடுகிறார்கள் பொடியன்குளம் மக்கள். ஆனால் குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன்.

ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில், பல தடைகளையும், பல இழப்பையும் சந்திக்கும் கர்ணன், உரிமையை மீட்டு தன் மக்களுக்கு தந்தானா? இல்லையா? இறுதியில் வென்றது சாதியா? அல்லது உரிமையா? என்பது தான், கர்ணனின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கர்ணனாக வரும் தனுஷ், கீழ் சாதி மக்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். அதே போல், கர்ணனுக்கு துணையாக நிற்கும் நடிகர் லால், தனது நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தகமேயில்லை.

கதாநாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்தை மலையளவு தூக்கி நிறுத்துகிறது. அதேபோல், வில்லனாக வரும் நடிகர் நட்டி, காவல் துறை அதிகாரியாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அலரவைக்கிறார்.

இவர்களை போல் இப்படத்தில் நடித்த கோழி குஞ்சு, கழுதை, குதிரை, பருந்து என ஆரம்பித்து, தனுஷின் தங்கையாக வரும் கதாபாத்திரம் வரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் பல கதைகளை கூறுகிறது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பின், மாரி செல்வராஜ் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்து ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

சந்தோஷ் நாராயணனின் இசை, படத்தின் பாதி வெற்றி. ஒளிப்பதிவின் மூலம் தேனி ஈஸ்வர் மிரட்டியுள்ளார். மீண்டும் தனது தயாரிப்பில் ஓர் சிறந்த படைப்பை தந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.

இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்துக்கொண்ட கதைக்களம், மாஸ்டர் பீஸ். திரைக்கதை வெற்றிக்கு வழி காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

தனுஷ், லால், உள்ளிட்ட அனைவரின் நடிப்பு.

மாரி செல்வராஜின் கதை, திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், அது பெரிதாக குறைபோல் தெரியவில்லை.

மொத்தத்தில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ் கர்ணன்.