புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு, சிம்பு நிதியுதவி !

270

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு, நடிகர் சிம்பு நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.

நடிகர் தவசி, நான் கடவுள், ஜில்லா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், 2013-ம் ஆண்டு, சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

உணவுக் குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். படங்களில் பெரிய மீசையுடன் தோன்றும் தவசிக்குப் புற்றுநோய் சிகிச்சையால் முடி அனைத்தும் உதிர்ந்து ஆளே மாறிப்போய்விட்டார்.

சிகிச்சைக்கு போதிய வசதியில்லாததால், அவருக்கு உதவும்படி சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் 25 ஆயிரம் ரூபாயும், சூரி சார்பில் 20 ஆயிரம் ரூபாயும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவசி அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிதியுதவியாக வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது உதவிக்கரத்தினை நீட்டியுள்ளார். சிம்பு சார்பில் தவசிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.