காணாமல் போகும் இயக்குனர் – என் பெயர் ஆனந்தன் விமர்சனம் !

572

என் பெயர் ஆனந்தன்…

நாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல் நாளில் மர்மநபர்களால் கடத்தப்படுகிறார்.

இதனால் படப்பிடிப்பு நின்று போய்விடுகிறது. மனைவி அதுல்லா ரவியும் சந்தோஷ் பிரதாப் காணவில்லை என்று வருத்தப்படுகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சந்தோஷ் பிரதாப் மீண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிற்பாதியில் அவரை முழுவதும் கட்டி வைத்து விடுகிறார்கள். நடிப்பையும் கட்டி வைத்தது போல் இருந்தது.

நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, ஒரு காட்சியில் சிரித்துவிட்டு 2 காட்சியில் அழுதுவிட்டு செல்கிறார். அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆகியோர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

கூத்து, நாடக கலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சொல்லவந்ததை கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

நவீன உலகத்தால் கூத்து நாடகம் ஆகியவை அழிந்து விட்டதாகவும் அவர்களுக்குள்ளும் நல்ல கதைகள் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். சிறந்த கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூத்து பாடல் ரசிக்க வைக்கிறது. மனோ ராஜாவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘என் பெயர் ஆனந்தன்’ தெளிவு இல்லை.