போடா போடி…….
சிம்பு நடித்த போடா போடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது மஹா, மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்காகவே சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தோற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மஹா, ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களைத் தொடர்ந்து, போடா போடி படத்தின் 2ஆம் பாகத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது குறித்து தயாரிப்பாளர் பதம் குமார் கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து,
2 ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திலும் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். போடா போடி 2 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க இருக்கிறார். அவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தமிழ் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். போடா போடி படக்குழுவையே வைத்து அதன் 2ஆம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளேன்.
போடா போடி படத்திற்கு தரண் தரண் நன்றாக இசையமைத்திருந்தார். போடா போடி 2 படத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக கதை யோசித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் அதற்கான கதை ஓகே ஆனதாகவும் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக போடா போடி 2 இருக்க வாய்ப்பில்லை. ஆனால், போடா போடி மற்றும் அதன் 2 ஆம் பாகம் இரண்டையும் இணைக்கும் ஒரு பின் கதை கண்டிப்பாக படத்தில் இருக்கும்.
முதல் பாகம் லண்டனில் படமாக்கப்பட்டது. அதே போன்று போடா போடி 2 படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.