கோப்ராவுக்காக கொல்கத்தா செல்லும் சியான் விக்ரம்!

247

சியான் விக்ரம்…

கோப்ரா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 58ஆவது படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

மேலும், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 12 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா வெளியாக இருக்கிறது.

சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருக்கிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் படக்குழுவினருடன் இணைந்து விக்ரம் கொல்கத்தா புறப்படுகிறார். அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை முடித்து தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.